திருச்சி : திருவெறும்பூர் சோழ மாநகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு வழிபட்டால் குழந்தை வரம், திருமணத் தடை உள்ளிட்டவை நீங்கும் என நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மாசி மாதம் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக 24ஆம் ஆண்டு திருவிழா இன்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் சோழ மாநகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து சுமார் 250 பேர் ஊர்வலமாக அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்.
பால்குடம் எடுத்து வந்தவர்களுக்கு இஸ்லாம் மதத்தைச் சார்ந்த மக்கள் ஜாதி மத வேறுபாடுகளைக் கடந்து நீர்மோர் கொடுத்து களைப்பை போக்கினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.