திருச்சி: மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம் சார்பில் கடந்த 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை "எங்களுக்கு வேலை வேண்டும்" என்று முழக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரசாரத்தின் இறுதி நிகழ்வாக வருகின்ற 2ஆம் தேதி, திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தது. இன்று வரை அந்த வாக்குறுதியை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசாங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த மாநாடு நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தனியார் பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலும் வேலை வாய்ப்பிற்கு அமர்த்தப்படக்கூடியவர்கள் அனைவரும் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் ஒப்பந்தப் பணியாளர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள்.
ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறைந்த ஊதியத்தோடு பணியாற்றும் நிலை ஏற்படுகிறது. மாதத்திற்கு 21 ஆயிரம் ரூபாய் அடிப்படை வருமானம் இருக்க வேண்டும் என்று சட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே ஒப்பந்த தொழிலாளர்கள் பெறும் நிலை உள்ளது. இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கக்கூடிய அனைவரையும், நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் தான் இந்தியாவின் ஆலயங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய காலகட்டத்தில் சுமார் 33 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப்பொறுப்பு ஏற்றதிலிருந்து இன்று வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்குப் பதிலாக 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அதானி குடும்பத்திற்கும், அம்பானி குடும்பத்திற்கும் மிகுந்த விசுவாசியாகவும், ஏஜென்டாகவும் செயல்படுகிறார். நாடாளுமன்றத்திலும் கூட அதானி பிரச்னைக்காக அவைகள் ஒத்தி வைக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அதானியின் கடன்களை மத்திய அரசு எப்படி தள்ளுபடி செய்கிறதோ, அதேபோல் கல்விக்காக கடன் பெற்ற மாணவர்களின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது அரசாங்க வேலை வழங்க வேண்டும்" என்றார்.