திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60). டீ மாஸ்டரான இவர் திடீரென மாரடைப்பால் நேற்று (அக்.9) உயிரிழந்தார். இந்த நிலையில் இவரது உறவினர்கள் வழக்கம் போல் தங்களது இறுதி சடங்கை செய்து திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு தகனம் செய்ய அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அவரது உறவினர் இறந்த பாலசுப்ரமணியனின் உடலுக்கு, அகோரி முறைப்படி ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தில் உள்ள அகோரி மணிகண்டனிடம் கேட்டுக்கொண்டனர். அதன் பேரில், முறையாக காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் தன் சீடர்களுடன் உடல் முழுவதும் திருநீர் அணிந்து கொண்டு சுடுகாட்டிற்கு வந்தார்.
அப்போது இறந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் தங்களது இறுதி சடங்கை முடித்த பிறகு, அகோரி மணிகண்டன் தகன மேடையில் உள்ள பாலசுப்ரமணியனின் உடல் மீது அமர்ந்து மந்திரங்கள் ஜெபித்து பூஜை செய்தார். அப்போது சக அகோரிகள் தமரா மேடம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் 'ஹர ஹர மகாதேவா' என முழங்கினர். இறுதியில் பாலசுப்பிரமணியனின் சடலத்திற்கு தீபாரதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்தார்.
காசியில் நடைபெறக்கூடிய இந்த ஆன்ம சாந்தி பூஜையானது திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அரங்கேறிய சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது. மேலும் அகோரி மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் தன் தாயார் சடலம் மீது அமர்ந்து ஆன்ம சாந்தி பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.
இறந்தவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக சடலம் மீது அமர்ந்து அகோரிகள் பூஜை செய்வது வழக்கம். அதைத்தான் அகோரி மணிகண்டனும் செய்தார். மணிகண்டன் காசி, நேபாளம் ஆகிய இடங்களில் முக்கிய பண்டிகைகள் நடைபெறும் போது அங்கு சென்று விடுவார். 2, 3 மாதங்களுக்கு ஒரு முறை திருச்சி அரியமங்கலம் வந்து, ஜெய் அகோர காளி கோயிலில் பூஜைகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. அகோரிகளின் இந்த விசித்திர பூஜையானது பொதுமக்களிடையே திகிலடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு; 2 தனிப்பிரிவு காவலர்கள் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றம்!