திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி வடக்கு புறநகர் மாவட்டம் அதிமுகவில் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நியமனம் செய்யப்படடார். இந்நிலையில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட உத்தமர்தசீலி கிராமத்தில் நிர்வாகிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேசியதாவது, "2021ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சி மீது குறை கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த 6 மாதமாக அரசியல் செய்வது அனைவருக்கும் தெரியும்.
மாதத்திற்கு ஒரு முறை ஆர்ப்பாட்டம் அறிவிக்கிறார். வீட்டிற்கு முன்பு வெளியே வந்து 15 நிமிடம் கறுப்புக் கொடி ஏந்திக் கொண்டு புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குள் சென்று விடுகிறார்.
இது தான் அவரது மக்கள் பணி. அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு முதலமைச்சராக வேண்டும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரது கனவு கனவாகத்தான் இருக்கும். அதிமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். திமுக நிர்வாகத்தில் அனைத்து முடிவுகளையும் அவரது மகன் உதயநிதி தான் எடுப்பதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால், ஸ்டாலினை நம்ப முடியாமல் திமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.
கட்சியிலேயே அவருக்கு பவர் இல்லை. மக்கள் மத்தியில் அவருக்கு எப்படி பவர் வரும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் ஸ்டாலின் தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலை உருவாகும்" என்றார்.
இதையும் படிங்க: பீன்ஸ் பயறில் மஞ்சள் நோய் பாதிப்பு - விவசாயிகள் கவலை