திருச்சி: முனைவர் ஜி. அகிலா, என்ஐடி திருச்சி இயக்குநராக இன்று (பிப். 3) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், முனைவர் மினி ஷாஜி தாமஸைத் தொடர்ந்து 57 ஆண்டு பழமையான இந்நிறுவனத்தின் 2ஆவது பெண் இயக்குநராகிறார்.
முன்னதாக முனைவர் அகிலா, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய என்.ஐ.டி புதுச்சேரியின் பொறுப்புப் பதிவாளராகப் பதவி வகித்தார். அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், பிளாக்செயின் தொழில்நுட்பம், பெருந்தரவு பகுப்பாய்வியல், ஆன்டாலஜி பொறியியல், வேதித்தகவலியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அளித்துள்ளார்.
என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் ஒன்பதாமிடம் பெற்றுள்ள பொறியியல் கல்லூரி என்ற சிறப்புக்குரிய என்.ஐ.டி திருச்சி, புதிய இயக்குநரின் தலைமையின் கீழ் மென்மேலும் உயரங்களைத் தொடத் தயாராக உள்ளது.
இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொள்கையில், என்.ஐ.டி திருச்சியினை தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிகளவில் புலப்படுமாறு செய்வதே தமது முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.
முனைவர் அகிலா மிகச்சிறந்த கல்வியாளராகவும் நிர்வாகியாகவும் முத்திரை பதித்த, 32 ஆண்டு அனுபவத்தோடு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சங்கர் ஜிவால் பேட்டியை கடுமையாக எச்சரிக்கிறேன் - ஹெச். ராஜா