தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாகை மாவட்டம், வேதாரண்யத்தையடுத்த கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக, உள்ளிட்ட பிரதான கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் 33 வயதான இளைஞர் சுப்புராமன்.

இவர் பதவியேற்ற நாள் முதல் சாலை, குடிநீர், மின்விளக்கு என அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ள கருப்பம்புலம் ஊராட்சியின் அடிப்படை தேவைகளை முனைப்புடன் பூர்த்தி செய்து வருகிறார்.
கருப்பம்புலம் ஊராட்சிக்கு உள்பட்ட தெற்குகாடு பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளியான முருகையன் இறந்த பிறகு ஐந்து ஆண்டுகளாக இவரது மனைவி கோமதி, இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக எவ்வித ஆதரவுமின்றி, அடிப்படை வசதியான மின்சாரம் கூட இல்லாமல் வசித்து வருவதை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்றபோது அறிந்துள்ளார் சுப்புராமன். இதனையடுத்து, அவர்களிடம் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மின்சார வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
ஊராட்சி மன்ற தலைவராக அவர் வெற்றி பெற்றதையடுத்து, சில தவிர்க்க முடியாத காரணங்களால் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து தனது சொந்த செலவில் கோமதியின் வீட்டிற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவில் சூரிய ஒளி மின்சாரம் வழங்கி தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் சுப்புராமன்.

இது போன்ற இளம் தலைமுறை தலைவர்களால் பல கிராமங்கள் ஒளிரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை