சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 முதல் 36 செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30 முதல் 34 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கான முன்னறிவிப்பு
19-02-2025 மற்றும் 20-02-2025: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதையும் படிங்க: வரும் 25-ந் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!
21-02-2025 முதல் 23-02-2025 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
24-02-2025 மற்றும் 25-02-2025: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (பிப்.19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை ( பிப். 20 ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.