தென்காசி: தென்காசியிலிருந்து மகா கும்பமேளாவிற்கு 40 பேர் கொண்ட கும்பல் சென்ற நிலையில், தற்போது அதில் இரண்டு பெண்கள் மட்டும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காசியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடுவதற்காக தென்காசியிலிருந்து அவரது உறவினர்கள் காசிக்குச் சென்றுள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26- ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டும் இன்றி, உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சகணக்கான பக்தர்கள் வருகை புரிந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரையில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்காசியில் இருந்து கும்ப மேளாவிற்கு சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து காணமல் போன பெண்ணின் உறவினர் சீனிவாசன் கூறுகையில், “தென்காசி பகுதியில் இருந்து 40 பேர் கொண்ட குழு, உத்தரபிரதேச மாநிலம் மகா கும்பமேளாவிற்கு செல்ல திட்டமிட்டு, அவர்கள் காசிக்கு ரயில் மூலம் கடந்த 13 ஆம் தேதி யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனையடுத்து நேற்று முன்தினம் (பிப்ரவரி 18) காசியில் இருந்து அயோத்திக்கு செல்வதற்காக தனி தனி குழுக்களாக பிரிந்து வாரணாசி ரயில்வே நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கும்பமேளா பக்தர்களால் வாரணாசியில் சிக்கிய தமிழக கிரிக்கெட் வீரர்கள்; ஆக்ஷனில் இறங்கி உதவிய உதயநிதி! |
இந்த சம்யத்தில் ராமலட்சுமி மற்றும் கஸ்தூரி ஆகிய இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு தமிழ் மட்டுமே பேச தெரியும். அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவை யாத்திரை குழுவிடம் இருப்பதால், அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், தென்காசியில் இருந்து கும்பமேளவிற்கு சென்றவர்கள், இரண்டு பெண்கள் காணாமல் போனது தொடர்பாக காசியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, இது குறித்த தகவலை தென்காசியில் உள்ள உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், தற்போது தென்காசியிலிருந்து உறவினர்கள் காசிக்கு காணாமல் போன இரண்டு பெண்களையும் தேடி சென்றுள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் தென்காசி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.