திருப்பூர் மன்னரைப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான துணிகளுக்கு நிறமேற்றக்கூடிய சாயசலவைப்பட்டறை செயல்பட்டுவருகிறது. துணிகளுக்கு நிறமேற்றிய பின்பு வெளியேறும் சாயக்கழிவு நீர் அங்குள்ள தொட்டிக்குள் சேகரிக்கப்பட்டு சுத்தகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் கொதிகலனில் எரிக்கக்கூடிய மரங்களை வெட்டவந்த தொழிலாளர்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் மதியம் மரம் வெட்டும் பணியினை முடித்துவிட்டு சாயக்கழிவு நீர் இருந்த தொட்டியின் திட்டின் மேல் அமர்ந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஐந்து அடி உயரமுள்ள அத்தொட்டியினுள் விழுந்த அவர் உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் காவல் துறையின் உதவியுடன் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அருகிலிருந்த திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.