திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் நிலவேம்பு கஷாயம் தயாரிப்பதற்கான பொடியும், பிளாஸ்டிக் கவர்களில் 16 லிட்டர் கள்ளச்சாராயமும் இருந்தது தெரியவந்தது.
அதனை அடுத்து காரில் இருந்த நால்வரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற காவலர்கள் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் நால்வரும் வால்பாறை நகராட்சியில் பணி புரிந்து வருவதாக கூறினர். மேலும் கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சரவணன், ஜோதி செல்வராஜ், மணிகண்டன், அருண் ஆகிய நால்வரும் நிலவேம்பு கஷாயம் தயாரிப்பதற்காக நிலவேம்பு பொடி வாங்க ஆத்தூருக்கு சென்று வந்தது தெரியவந்தது.
![கள்ளச்சாராயம் கடத்தி வந்த நகராட்சி ஊழியர்கள் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-01-4municipalemployeesarrestedforillicitliquor-vis-7204381_02052020130402_0205f_1588404842_28.jpg)
பணியை முடித்து திரும்பி வரும் வழியில் கள்ளச்சாராயம் விற்பiன செய்வதை பார்த்த அவர்கள் சாராயம் அருந்த ஆசைப்பட்டு 16 லிட்டர் கள்ளச்சாராயத்தை பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி வரும்போது பிடிபட்டனர். இதனை அடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
![கள்ளச்சாராயம் கடத்தி வந்த நகராட்சி ஊழியர்கள் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-01-4municipalemployeesarrestedforillicitliquor-vis-7204381_02052020130402_0205f_1588404842_896.jpg)