திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை மலை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுதந்திரமடைந்த நாளிலிருந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் அக்கிராமத்தினர் அவதிபட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக அமைச்சர்கள் வீரமணி, நிலோஃபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கிராம மக்களே மண்சாலை அமைத்தனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதி மக்களை நேரில் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினர். மேலும் குடிநீர், ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழையால் கிராம மக்கள் அமைத்த மண்சாலை சேதமடைந்து ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், அரிப்பு ஏற்பட்ட சாலைகளை சீர் செய்யும் பணியில் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்களின் கூட்டு முயற்சியும், அவர்களது அயராத உழைப்பைக் கண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.