திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரில் பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி, கடந்த 25 ஆண்டு காலமாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார். கடந்த 31.3.2020ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியில் கட்டப்பட்ட வீட்டில் 135 கேன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தையும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள், குவாலிஸ் கார் ஒன்று ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் இவரை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், 13 பேர் கொண்ட குழுவை நியமித்து தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது நேதாஜி நகர் பகுதியில் மறைந்திருந்த மகேஸ்வரியை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்த 21 கிலோ கஞ்சா, 20 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். மகேஸ்வரியை கைது செய்ய முற்படும்போது காவலர் சூர்யா தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவரது உறவினர்களான உஷா, காவியா, தேவேந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான அவரது கணவர் சீனிவாசன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதில் சீனிவாசன் அவரது மனைவி மகேஸ்வரி, உறவினர்கள் முருகன், உஷா, சரவணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மகேஸ்வரியின் சொத்துக்களை என்டிபிஎஸ் (NDPS) சட்டத்தின் கீழ் அனைத்தையும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு போதைப்பொருள்கள் கடத்தல் வழக்கில் வாங்கப்பட்ட சொத்துகள் என தெரியவந்ததால், இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு காவல்துறை மூலம் அவர்களுடைய சொத்தை அரசுடமையாக்க உத்தரவு கேட்கப்பட்டது. அதற்கு மத்திய நிதி அமைச்சகம், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மத்திய அரசுக்கு திருப்தி இல்லாததால் இந்த சொத்துக்களை அரசுடமையாக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கஞ்சா பதுக்கி வைத்த வழக்கில், நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளாக நிரூபித்த உடன் அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பொது ஏலம் விட்டு அதில் வரும் வருமானம் மத்திய அரசு மூலம் மாநில அரசுக்கு ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவருடைய சொத்துக்களை விற்கவோ வாங்கவோ கூடாது என வாணியம்பாடி கிராம காவல் நிலையத்தில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக மகேஸ்வரி சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் கைப்பற்றி அரசுடமை ஆக்கப்பட்டது. இதில், வேப்பமரத்து சாலை பகுதியில் நான்கு நிலங்கள், தென்றல் நகர் பகுதியில் ஒரு வீடை கைப்பற்றியுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட ரூ.20 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரொக்கமும் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் ஆட்சியர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய உறவினர்கள் கணவர் பெயரில் அரசுக்கு விரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


இதையும் படிங்க: பட்டப்பகலில் மூதாட்டியிடம் பணம் பறித்த கும்பல்!