திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட சுட்டாகுண்டா பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் 89 பெத்தூர் என்னும் கிராமத்திற்குச் செல்லும் மலைச்சாலை என்னும் பிரிட்டிஷ் இராணுவ சாலை ஒன்று உள்ளது. இச்சாலையானது தமிழகத்தில் 4 கிலோமீட்டர் தூரமும் ஆந்திராவில் 6 கிலோமீட்டர் தூரம் என 10 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவின் 89 பெத்தூர் என்னும் கிராமத்தை சென்றடைகிறது.
இச்சாலையானது தமிழ்நாடு சித்தூர் மாநிலத்தில் இருந்தபோது ராணுவ வீரர்கள் பயிற்சி பெற பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ சாலை தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது இச்சாலையில் அதிக அளவு மரங்கள் செடி கொடிகள் வளர்ந்து முற்றிலும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இருந்த போதும் ஒத்தையடி பாதையாக இச்சாலை தற்போது வரை இருந்து வருகிறது. இது குறித்து தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான சுட்டகுண்டா பகுதியில் வசிக்கும் விவசாயி ஜெயகுமார் கூறுகையில், “தலைமுறை தலைமுறையாக தமிழ்நாடு ஆந்திரா மக்கள் இந்த ராணுவ சாலையை பயன்படுத்தி வந்தனர்.
காலப்போக்கில் இச்சாலையை யாரும் பயன்படுத்தவில்லை. இந்த சாலையை மீண்டும் சீரமைத்தால் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கும், தமிழ்நாடு எல்லைப்பகுதியில் விளையும் விவசாய பொருள்களை 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே சென்று ஆந்திராவில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்ய முடியும்.
இச்சாலை ஆந்திர மற்றும் கர்நாடகாவை இணைப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் 40 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் முக்கிய பகுதிகளை அடையும் நிலையுள்ளதால், ஏற்கனவே உள்ள இச்சாலையை சீரமைத்தால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்ல மக்களின் பயண நேரம் வெகுவாக குறையும்” என தெரிவித்தார்.
இச்சாலையை அமைக்க ஆந்திர அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு ஏனோ காலம் தாழ்த்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: குரூப்-2 தேர்வில் சாதித்த 55 வயது மாற்றுத்திறனாளியின் வைராக்கிய கதை