திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து குடோன் நடத்திய கிருஷ்ணன் என்பவரை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பைபாஸ் சாலை இப்ராஹிம் மசூதி தெருவில், செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கிருஷ்ணன் என்பவர் வாடகைக்கு குடோன் எடுத்து அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்து வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம் தலைமையில் காவல்துறையினர் சென்று குடோனில் சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, குடோனை ஆய்வு மேற்கொண்டு பின்னர் அதனை சீல் வைக்க வருவாய் துறைக்கு பரிந்துரை செய்தார்.
![Gutkha seized](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-02-gutkha-seized-vis-scr-pic-tn10018_06072021194411_0607f_1625580851_1000.jpg)