திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் கடந்த 7.11.2022 அன்று அடகு கடையில் 10 சவரன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இக்கொள்ளைச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மூன்று தனிப்படை அமைத்து குற்றாவளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் வெங்கிளி பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பெரியாங்குப்பம் பகுதியில் அடகுகடையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டதில் அவர்கள் பெரியாங்குப்பத்தை சேர்ந்த திவாகர், சதீஷ் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த கருணா, பெத்தலேகம் பகுதியை சேர்ந்த மெல்வின், சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த மெல்வின் என்பதும், இவர்கள் ஐந்து பேரும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்கொள்ளை, இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 75 சவரன் தங்கநகை, 9 கிலோ வெள்ளி, 10 செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.