திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மோட்டுகொள்ளைப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் நேற்று (ஏப்ரல்.1) இரவு இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்நிகழ்வை அதே பகுதியைச் சேர்ந்த தப்ரேஸ் அகமது, ரகமதுல்லா ஆகியோர் தட்டிக்கேட்ட போது இரு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலில் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் மோதல் தொடர்பாக ஆம்பூர் - மோட்டுகொள்ளைப் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷா மற்றும் ஏழுமலை ஆகியோர் அளித்தப்புகாரின் பேரில் சந்தோஷ்குமார், சரத்குமார், ரகமதுல்லா, சதீஷ்குமார், தப்ரேஸ் அகமது, ஆகிய 6 பேரை ஆம்பூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோதல் நடைபெற்ற மோட்டுகொள்ளைப் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா (பொறுப்பு எஸ்.பி) சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
ஆம்பூரில் பைக்கை வேகமாக ஓட்டியது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது