திருப்பத்தூர்: படித்த வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு SSLC மற்றும் அதற்குகீழ் படித்தவர்களுக்கு ரூ.600/ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சேர்த்து, வழங்குவதற்கு பதிலாக, மாதந்தோறும் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது.
எனவே, கீழ்க்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர், உதவித்தொகைபெற, விண்ணப்பங்கள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான மற்றும் வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி/கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்கக்கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள்.
இவ்வுதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்பப் படிவங்களை திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 28.02.2023 வரை திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளித்திட வேண்டும்.
மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று பத்தாண்டுகாலம் நிறைவு பெறாமல் 2022-2023ஆம் நிதியாண்டிற்கு சுய உறுதி ஆவணம் அளிக்காதவர்கள், 28.02.2023-க்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு’ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போட்டித்தேர்வு வெற்றியாளரா நீங்கள்?: வழிகாட்ட வாங்க.. கலெக்டர் அழைப்பு!