திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த குமாரம்பட்டி வள்ளுவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர், தயாளன் மகன் மேகநாதன் (35).
இவருக்கும், இவரது உறவினர்களான 5 குடும்பத்தார்களுக்கும் சுமார் 20 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி பூங்கோதை (43). இவர் ஓசூர் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
அந்த 20 ஏக்கர் நிலத்தின் அருகே பூங்கோதைக்குச் சொந்தமாக, சுமார் ஒரு ஏக்கர் அளவிலான விவாசயம் நிலம் இருந்துள்ளது. அதனைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, வேறொருவருக்கு விற்றுவிட்டார். மேகநாதன், பூங்கோதை ஆகிய இருவரின் நிலத்திற்கு இடையே 8 அடி பாதையை, இந்த ஐந்து குடும்பங்களும் பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனவே, இந்த வழியைப் பயன்படுத்தக்கூடாது; தான் மற்றவருக்கு விற்று விட்டேன் எனக் கூறி சுமார் ஐந்து குடும்பத்தாரிடம் பூங்கோதை மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி மேகநாதனை காவலர் என்ற காரணத்தால் பூங்கோதை தாக்கியும் உள்ளார்.
இதன் காரணமாக பூங்கோதை மீது நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்துள்ளனர். மேலும், பல ஆண்டு காலாக பயன்படுத்திய பொது வழியை மீட்க கோரியும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த மேகநாதன் இன்று (டிச.13) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில் தான், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை, தன் மீது ஊற்றி மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கண் முன்னே தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த நகர காவல் துறையினர், மேகநாதனை மீட்டு திருப்பத்தூர் காவல் நகர நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: முன்பகை காரணமாக இளைஞருக்குச் சரமாரி வெட்டு