தூத்துக்குடி உட்கோட்ட காவல் நிலைய அனைத்து ஆய்வாளர்கள் பங்குபெற்ற பொதுமக்கள் புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் முகாம் தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதனை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் உடனடி தீர்வு காண்பதற்காக மாவட்டம் முழுவதும் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், புதுக்கோட்டை, விளாத்திகுளம்,மணியாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட எட்டு சரகங்களில் முகாம் நடைபெறுகிறது.
கடந்த சில நாள்களாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வந்த புகாரின் அடிப்படையில் இம்முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து உடனடி தீர்வு காண்பதற்காக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் இருவரையும் அழைத்து தீர்வு காணப்பட உள்ளது.
காவல் துறையினர் அவர்களது சொந்த வாகனத்தில் மட்டுமே காவலர் என்ற ஸ்டிக்கரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களது உறவினர்கள் வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது. அரசு அங்கீகாரம் இல்லாத ஊடகத்தினர் ஊடக ஸ்டிக்கரை பயன்படுத்த அனுமதி இல்லை அவ்வாறு பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.