மதுரை: கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த உதயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தில் உள்ளேன். நான் நியூ ஜெர்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தேன்.
கூடங்குளத்தில் அமைந்த அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், அரசு எங்கள் மீது 248 வழக்குகளை பதிந்தது. அதில், 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழ்நாடு அரசால் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் என் மீது குற்ற வழக்கு உள்ளதால் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. என்மீது போடபட்ட வழக்கில் இதுவரை எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
எனவே எனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பாஸ்போர்டை திரும்ப பெற்றேன். ஆனால் நான் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெறக் கோரி அதிகாரிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் நடைபெற்ற இதழியல் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடர்ந்தேன். இதனையடுத்து நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனால் தனக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நான் மீண்டும் சிங்கப்பூர் செல்வதற்கு விண்ணப்பித்த போது, எனக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து இருப்பது தெரிய வந்தது. எனவே எனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நடவடிக்கையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனக்கூறி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கில் லுக்அவுட் நோட்டீஸை திரும்பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் பேரணிக்கு மறுப்பு - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு! - ABVP RALLY PERMISSION DENIED
ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை திரும்ப பெறவில்லை. எனவே லுக்அவுட் நோட்டீஸை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்
என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே, உதயகுமாருக்கு எதிராக மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் சுற்றறிக்கை நீக்கப்பட்டது. வெளிநாடு பயணம் செல்ல தடை இல்லை. வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்து அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.