தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சிக்கான புதிய திட்ட அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை இன்று (நவ.11) நடைபெற்றன.
இதற்கான ஆய்வுப்பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மாவட்ட எல்லையான வல்லநாடு பகுதியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்பட அரசு துறை முக்கிய அலுவலர்கள் முன்னதாக பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு 23 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான "லீனியர் ஆக்சிலேட்டர்" எனும் நவீன சிகிச்சை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கரோனா ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை அளவீடுகள், விழிப்புணர்வு செயல்பாடுகள் ஆகியவை குறித்தும், தற்போதைய கரோனா பாதிப்புகள், அரசு ஊரடங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்தும் மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற புதியத் திட்ட அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 328.66 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். மேலும், 22 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பசுமை வீடு திட்டம், அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப், வேளாண் துறை, கூட்டுறவுத் துறை, மகளிர் திட்டம் தொழில் வளர்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும், வங்கி கடனுதவிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
மேலும், சமீபத்தில் வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் மனைவிக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், அரசுத் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதையும் படிங்க:முதலமைச்சரின் வருகையைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய திமுகவினர்!