சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
அவர் கொண்டுவந்துள்ள மசோதாவில், '' ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக கருதுகிறேன். இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் இந்த முக்கியமான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிகிறேன்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும் போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் சாதனை படைத்த 'நோட்டா'! நாதக-வுக்கு அடுத்ததாக லீடிங்!
உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சி செய்கிறது.
சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லும் தன்மையை நீதிபதிகள் தீர்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமர்வு பிரதிபலிக்கவேண்டியது கட்டாயமாகும் எனவும் இது ஒரே மாதிரியான சமூக வர்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் இந்த மசோதா தெரிவிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறை (உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்) மட்டுமே என்றும், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும்'' என அந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.