தூத்துக்குடி: சத்தியமங்கலம் அருகே தாழ்வாடியை சேர்ந்த நரிக்குறவர் குடும்பங்கள் சில நாள்களாக கயத்தாறு அருகே முகாமிட்டு வசித்து வருகின்றனர்.
அவர்களில் சிலர் கயத்தாறு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆவுடையாபுரம் காட்டுப்பகுதியில் காடை, கவுதாரிகளை பிடித்து வந்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்த கோவில்பட்டி குருமலை வனச்சரகர் பாரதி உத்தரவின் பேரில் வனவர் நாகராஜ் மற்றும் வன காவலர்கள் கயத்தாறில் நரிக்குறவர்கள் கூடாரமிட்டு தங்கியுள்ள பகுதிக்கு விரைந்து வந்து சோதனையிட்டனர்.
சோதனையில் அவர்கள் இரண்டு கூண்டுகளில் வைத்திருந்த சுமார் 50 கவுதாரிகளை கைப்பற்றி வாகனத்தில் ஏற்ற முயன்றனர். உடனே அங்கிருந்த ஆண்களும் பெண்களும் வனக்காவலர்களை சூழ்ந்துகொண்டு அவை விற்பனைக்காக பிடிக்கப்படவில்லை எங்கள் உணவுக்காக பிடிக்கப்பட்டவை என கூறி வாதம் செய்தனர்.
மேலும், அந்த சமயத்தில் அருகிலுள்ள ஊர்மக்களும் நரிக்குறவர்களுக்கு பரிந்து பேசவே வனக்காவலர்கள் இனி பறவைகளை பிடிக்க கூடாது என எச்சரித்து சென்றனர். அப்போது, ஊரடங்கினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நரிக்குறவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க: 'முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்!' - முதலமைச்சர் வேண்டுகோள்!