தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளிலிருந்து நிலக்கரி, பிண்ணாக்கு உள்ளிட்ட மொத்த சரக்குகள் கப்பல் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
அதன்படி இந்தோனேசியாவிலிருந்து பிண்ணாக்கு ஏற்றிவந்த டிஎஸ் பேவர் என்ற கப்பல், நேற்று காலை 5.18 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்துக்குள் வந்தது. அங்கு 5ஆவது சரக்கு தளத்தில் கப்பல் நிறுத்தப்பட்ட கப்பலிலிருந்து சரக்கை இறக்கும் பணி நடைபெற்றது.
அப்போது கப்பலில் ஆயில் டேங்கர் பகுதியில் நேற்று மதியம் திடீரென லேசாக தீப்பிடித்தது. அதை தொடர்ந்து பூச்சி தடுப்பு மருந்து வைக்கப்பட்டு இருந்த பகுதியிலும் தீப்பிடித்ததாக கூறுப்படுகிறது. இதனால் அங்கு பயங்கரமாக புகை வரத் தொடங்கியது.
இதனையடுத்து அங்கு நின்ற இழுவைக்கப்பலில் இருந்து தீயை அணைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். பின்னர் துறைமுக தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.