சென்னை: பட்ஜெட் 2025 பீகார் மாநில பட்ஜெட் போன்று உள்ளது. பேரறிஞர் அண்ணா கூறியது போன்று, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போன்று உள்ளது. திருக்குறளை மட்டும் வாசிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாள் இன்று (பிப்ரவரி 03) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தந்தையின் புகழை பாடுவதும், அவரது தந்தையின் பெயரை வைப்பதுமாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சி கலக்க்ஷன், கரெக்க்ஷன், கமிஷன் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவை பொருத்தவரை அண்ணாவை மறந்தவர்கள், அண்ணாவின் வழி நடக்காதவர்கள், அண்ணாவை பின்பற்றாதவர்கள்.
ஈசிஆர் விவகாரம் ஆர்.எஸ்.பாரதியின் திரைக்கதை:
அறிவாலயத்தின் விசாரணை அதிகாரி ஆர்.எஸ்.பாரதி. சென்னை ஈசிஆரில் காரில் பெண்களை துரத்திய விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு அரசியல் பின்புலம் உள்ளதாக ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். குற்றம் சாட்டப்பட்ட சந்துருவை பிடித்து வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
அதில், தேவையானதை மட்டும் எடிட் செய்து கொடுத்துள்ளனர். ஏன் சந்துருவை பத்திரிகையாளர்கள் முன்பு நிற்க வைத்து பேச வைக்கவில்லை?. சம்பவம் நடந்த அன்றே பிடிக்காமல் நான்கு நாள் கழித்து பிடித்து மாறி மாறி வாக்குமூலம் சொல்வதும், சந்துருவின் வீடியோ முழுக்க முழுக்க திமுக மற்றும் ஆர்.எஸ்.பாரதியின் திரைக்கதை, வசனம், இயக்கம்.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா நினைவு நாள்.. மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
திருமாவளவ்ன் முழுக்க முழுக்க திமுகவிற்கு கொத்தடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு, எங்களை பற்றி பேசுவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. தவெக முதல் வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிற இரண்டு ஆண்டு குழந்தைக்கு எனது வாழ்த்துக்கள்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு வார்த்தை இருக்கிறதா?
இது ஏழைகளுக்கான பட்ஜெட் கிடையாது. தமிழ்நாடு குறித்து ஒரு வார்த்தை இருக்கிறதா? பீகாரில் தற்போது தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு பிரத்யேக திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில பட்ஜெட் போன்று உள்ளது. அண்ணா கூறியது போன்று, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போன்று உள்ளது. அதிகம் பேர் பயணிக்கக் கூடிய ரயில்வே துறை குறித்து எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
திருக்குறள் வாசிக்கும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. வரி செலுத்துகின்ற குடிமகனின் வரியை எடுத்து அந்த மாநிலத்திற்கு போட்டால் என்ன நியாயம்?. இதற்கு பாஜக-வின் நிதியை எடுத்து பீகாருக்கு வளர்ச்சி நிதியாக கொடுக்கிறோம் என கொடுக்க வேண்டியது தானே. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற கருத்தில் என்றென்றும் மாற்றமில்லை" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலி
இதனையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, “அதிமுக தோழர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் அந்த சார் என்பது குறித்து தீவிர புலன் விசாரணை செய்து வெளிப்படுத்த வேண்டும். இசிஆர் விவகாரத்தில் யார் குற்றவாளிகள் என்பதை விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கி ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், அவர் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறார் என்பது தெளிவாக புரியவில்லை. ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.