தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனம் மற்றும் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஒன்றான திருத்தேரோட்டம் இன்று(அக்.19) மிக விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலை 4:30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பின்னர், அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
10ஆம் தேதி திருவிழாவான நாளை அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதலும், 11ஆம் நாள் திருவிழா மதியம் அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும்; 12ஆம் திருவிழா காலை அம்பாள் பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம்; இ.பி.எஸ் உட்பட 750 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு...