தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் 4ஆவது குற்றவாளியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 11) இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால், தொடர்புடைய அனைவரும் முன்னிலையாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதன்படி இன்று தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பிரமுகர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரில் 3 பேர் மாவட்ட நீதிபதி தங்க மாரியப்பன் முன்பு ஆஜரானார்கள்.

அதிமுக, திமுக இரண்டு கட்சியைச் சார்ந்த நபர்களும் ஒரே வழக்கிற்காக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானதால் இரு கட்சிப் பிரமுகர்களும் நீதிமன்றத்தில் குவிந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்ட காவலர்கள் நீதிமன்றத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி தங்க மாரியப்பன், மேலும் 2 பேர் ஆஜராகாததால், வருகின்ற ஆகஸ்ட் 19ஆம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: அமைச்சரின் சகோதரர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு