சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் 600 பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் வகையில் ஒப்பந்தம் வெளியான நிலையில் அதை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 400 தாழ்தள மின்சார ஏசி பேருந்துகளும், 200 தாழ்தள மின்சாரப் பேருந்துகளும் என 600 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் வகையில் ஒப்பந்தம் பிப்ரவரி 12ஆம் தேதி விடப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் இந்த மின்சாரப் பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் வாங்கினாலும், அதனைத் தனியார் நிறுவனம் மூலமே இயக்கப்பட உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போக்கினால் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆகும் என பல்வேறு தரப்பிலும் விமர்ச்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 26) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சென்னை பல்லவன் இல்லம் எதிரில் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், தனியார் நிறுவனம் பேருந்துகளைக் கொள்முதல் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் கார்த்தி கூறுகையில், “சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 3500 பேருந்துகள் மூலம் தினமும் 31 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். பெண்களுக்கான விடியல் பயணம், பள்ளி மாணவர்களுக்கான பேருந்து பயணம், முதியோர் பேருந்து பயணம், போன்றவையும் இதில் அடக்கம்.
தனியார் நிறுவனத்தின் மூலம் 600 பேருந்துகள் இயக்கப்படும் பொழுது அந்த பேருந்துகளில் விடியல் பேருந்து பயணம், முதியோர் பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கான பேருந்து பயணம் போன்றவை அனுமதிக்கப்படாமல் போகும் சூழல் ஏற்படும். மேலும், தனியார்மயத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - TNSTC அறிவிப்பு!
600 பேருந்துகளில் நடத்துநர் மற்றும் பணியிடங்கள் தனியார்மயம் ஒப்படைக்கப்படும். மேலும் பராமரிப்பு பணியாளர்கள் உட்பட 2000 பணியிடங்கள் தனியாரிடம் செல்லும். போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மார்ச் 10ஆம் தேதிக்குள் போக்குவரத்து கழகம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாவிட்டால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.