திருவள்ளூர்: திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஜெயம் என்பவரது மகன் வினோத் ராஜ்குமார் (45), இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் வந்த அவருக்கு பெற்றோர்கள் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் வினோத் ராஜ்குமாருக்கு மீண்டும் அவரது பெற்றோர்கள் வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த திருமண வாழக்கையும் நிலைக்காமல் போய்விட இப்படியே அடுத்தடுத்து திருமணங்களை செய்து வைத்து கொண்டே வந்துள்ளனர்.
இதில், வினோத் ராஜ்குமாருக்கு 4-வது திருமணமாக தூத்துக்குடி பெரைரா தெருவை சேர்ந்த பியூலா(40), என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வினோத் ராஜ்குமார் தனது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதிக்கு மனைவி பியூலாவிடம் சொல்லாமல் சென்று உள்ளார்.
இதனால் சிறிது நாட்கள் கழித்து கணவனை தேடி நேரில் சென்ற போது அங்கு அவருக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்தது முடிந்தது தெரிய வந்ததை அடுத்து பியூலா அதிர்சியடைந்து உள்ளார். உடனடியாக தூத்துக்குடி வந்த பியூலா இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரினை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் வினோத் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே 3 திருமணங்கள் முடித்ததும் 4-வதாக தூத்துக்குடியை சேர்ந்த பியூலாவை பணத்திற்காக திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த திருமணத்தில் தனது 3-வது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து 4 திருமணங்கள் செய்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குபதிவு செய்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் மேலும் இந்த திருமணங்களுக்கு உடந்தையாக இருந்த வினோத் ராஜ்குமாரின் 3-வது மனைவி மற்றும் வினோத் ராஜ்குமாரின் அப்பா, மற்றும் அவரது தங்கை, தங்கையின் கணவர் உட்பட 10-பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.