தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் பேக்கரியில் ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி உரிமத்தை ரத்து செய்து பேக்கரியின் இயக்கத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல் காடு பகுதியைச் சேர்ந்தவர், இசக்கி ராஜா. இவர் நேற்று தனக்கு குழந்தை பிறந்ததற்காக தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பேக்கரியில், 450 ரூபாய்க்கு கேக் வாங்கியுள்ளார்.
பின்னர் வீட்டிற்குச் சென்று பார்த்த பொழுது கேக் கெட்டுப்போய் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தன் நண்பர்களோடு சென்று கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுபோதையில் வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞர் பலி!
பின்னர் இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலருக்கு தொலைபேசி மூலம் அவர் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தனியார் பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கெட்டுப்போன ஒன்பது கிலோ கேக் மற்றும் 2.5 லிட்டர் மில்க் ஷேக், 5 லிட்டர் நெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பேக்கரியின் உணவு பாதுகாப்புத் துறை உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்ததுடன், பேக்கரி மற்றும் உணவு பதார்த்தங்கள் விற்பனையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், மாவட்டம் முழுவதும் பேக்கரி நிறுவனத்தினர் உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ள விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.