தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அமிலங்களைத் தவிர்த்தல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாம் மாநகரில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமுக்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
மேலும் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ' உலகம் முழுவதும் தற்போது டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அமிலங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது ஐந்து விழுக்காடு அளவுக்கு இருக்கலாம் என ஆரம்பத்தில் ஐநா சபை, உலக சுகாதார நிறுவனங்கள் கூறி வந்தன. தற்போது அதை 2 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து இவை மேலும் குறைக்கப்பட்டு பூஜ்ஜியம் என்ற நிலையை அடைய வேண்டும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில், டிரான்ஸ்பேட் கொழுப்பானது உடலுக்குப் பல்வேறு தீமைகளை ஏற்படுத்துகிறது. இதனால், இதய நோய் உள்பட பல நோய்கள் மனிதனை தாக்கும் அபாயம் உள்ளது. இந்த கொழுப்பு திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சமையலுக்கு உபயோகப்படுத்தினால் உருவாகிறது. தற்போது துரித உணவகங்கள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், தின்பண்டங்கள், இறைச்சி ஆகியவற்றின் மூலமாக இந்தக் கொழுப்பு நம் உடலுக்குப் போய்ச் சேர்கிறது.
இதனைத்தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், விடுதி நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோரக்கடைகள் ஆகியவற்றில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. திரும்பத்திரும்ப பயன்படுத்தப்படும் எண்ணெயினால் ஏற்படும் விளைவுகள், நோய்கள் உள்ளிட்டவை குறித்து இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கப்படுகிறது. மக்கள் துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்க முறைகளைக் கொண்டு இருந்தாலே நாம் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க...கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சாட்சி விசாரணை தொடங்கியது