தூத்துக்குடி: வல்லநாடு அருகேவுள்ள வசவப்ப புரம் கிராமம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் விவசாயி சுடலை. இவரது மகன் மாலைராஜா (20), மகள் கவிதா (17) 12ஆம் வகுப்பு படித்துள்ளார்.
கவிதா தனது செல்போன் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், விடிய விடிய கேம் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார்.
பலமுறை கண்டித்தும் கவிதா கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில், நேற்று (ஜூன் 29) மாலை 5 மணியளவில் தனது செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த கவிதாவை, மாலைராஜா கண்டித்துள்ளார்.
தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணன்
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாலைராஜா வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து கவிதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கவிதா உயிரிழந்தார்.
இதையடுத்து உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த முறப்பநாடு காவல் துறையினர், கவிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய மாலைராஜாவை வல்லநாடு காட்டுப்பகுதியில் வைத்து கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த தாய் கைது!