தூத்துக்குடி: தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி எல்லைக்குள் கேரள விசைப்படகில் கேரள மீனவர்கள் இரவு, பகல் மீன் பிடித்து வருவதாகவும் அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மீனவர்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
கேரள மீனவர்களை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள்:
மேலும், கடந்த மாதம் கேரள விசைப்படகில் மீனவர்கள் தூத்துக்குடி கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்து கொண்டிருந்த போது, அவர்களின் படகை பறிமுதல் செய்து, மீனவர்களையும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கும் அழைத்து வந்தனர். இதனால், தூத்துக்குடி மீனவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மீனவர்களுக்காக ஒரு குழு அமைத்து, அந்த குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்தாகவும் அதில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இரவு, பகல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என உள்ளதால் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் மீனவர்கள்:
இதில் 6வது நாளான இன்று (பிப்.15) மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கோரிக்கையை முன் வைத்து விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஐஸ் வியாபாரிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் தமிழக அரசு மற்றும் மீன்வளத் துறையை கண்டித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீரென மீனவர்கள் சாலை மறியல் போராட்டமாக கடற்கரை சாலையில் உள்ள பழைய துறைமுகம் எதிரே உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை:
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சப் கலெக்டர் பிரபு, ஏடிஎஸ்பி மதன், தாசில்தார் முரளிதரன் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையின் போது மீனவர்கள் மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
25 ஆண்டு கால கோரிக்கை:
இந்த போராட்டம் குறித்து பேசிய விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் ஜவஹர், “25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசையும், மீன்வளத் துறையையும் கண்டிக்கிறோம். எங்களின் வாழ்வாதாரம் மிகவும் சீரழிந்து கொண்டிருக்கிறது. மிக இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம். ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்காத தமிழக அரசை கண்டிக்கின்றோம். மேலும், நாட்டுப் படகுகளில் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாத மீன்வளத் துறையை கண்டிக்கின்றோம். அரசு உடனடியாக தொழில் மாற்றத்தை தர வேண்டும். தரவில்லை என்றால் போராட்டம் அதிகமாக வெடிக்கும். நாங்கள் தொடர்ந்து 5 நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஆனால், தமிழக அரசும், மீன்வளத்துறையும் இது பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை” என்றார்.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ வருகிற 25ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு!
ஆய்வுக் குழு அறிக்கையை பின்பற்றுக!
மேலும் இது குறித்து பேசிய விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் சேவியர் கூறுகையில், “முன்னாள் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் ஆய்வு குழு அறிக்கை அளித்து அதில், ஜனவரி 15-இல் இருந்து இரவு, பகல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்று அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை இன்று வரை பின்பற்றபடவில்லை. ஆகவே, அரசு உடனடியாக மீனவ்ர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.