தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதூர்பாண்டியாபுரம் பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் லாரி, சரக்கு வாகனம் வந்தன. அவற்றை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, காவல் துறையினரைக் கண்ட சரக்கு வாகன ஓட்டி தப்பியோடினார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் லாரியை மடக்கிப்பிடித்து அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ் (26) என்பதும், லாரி, சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசியைக் கடத்திவந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, சரக்கு வாகனத்தைப் பறிமுதல்செய்த காவலர்கள் அனிஷை கைதுசெய்து சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
தொடர் விசாரணையில் தமிழ்நாட்டின் தென் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளிலிருந்து அரிசி மூட்டைகளைக் கள்ளத்தனமாகப் பெற்று தூத்துக்குடியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான குடோனில் பதுக்கிவைத்திருந்து, கேரளா, வெளிச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்றுவந்தது தெரியவந்தது.
இந்தக் கடத்தலுக்காகப் போலியாகத் தமிழ்நாடு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டுகள் தயாரித்து வாகனங்களில் பயன்படுத்திவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அனிஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி உள்ள அருகே உள்ள சேகர் என்பவருக்குச் சொந்தமான குடோனில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
குடோனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல்செய்து சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பறிமுதல்செய்யப்பட்ட அரிசி மூட்டைகளின் எடை 20 டன் இருக்கும் எனக் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்குமெனத் தெரிகிறது. தொடர்ந்து பறிமுதல்செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு உணவு தானிய சேமிப்புக் கிட்டங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணக்கூடாது; 2 ஆண்டுகள் கழித்து மறு தேர்தல் - கிருஷ்ணசாமி