திருவாரூர் நகர பகுதிக்குட்பட்ட ஸ்ரீதேவி நகரில் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. குடியிருப்பு அருகில் செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் செல்ஃபோன் டவருக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், செல்ஃபோன் டவர் அமைக்கும் இடமானது அப்பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலம், அவரிடம் குடியிருப்பு இடையே டவர் அமைப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு அவரும் டவர் அமைக்கவில்லை என ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது டவர் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இப்பணியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.