திருவாரூர் அருகேயுள்ள நீலக்குடி, பெரும்புகலூர், வண்டாம்பாளை ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களான அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டியை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வீடு வீடாகச் சென்று நேரில் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கரோனா நோய்த்தொற்று பற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், கவனமாக இருக்க வேண்டும்.
கரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இனிவரும் காலங்களில் அதைக் கையாளுவதற்குத் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு கைகளைக் கழுவுதல் போன்ற வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
திருவாரூரில் இதுவரை 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நான்கு பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கரோனா நோய்த்தொற்று மிகக் குறைவாகத்தான் உள்ளது. மேலும் தொற்று இருந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் யாருக்கும் பாசிட்டிவ் இல்லை.
அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுத்துவருகிறார். பொதுமக்களுக்கு இதுவரை 60 விழுக்காடு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
கரோனா நோய்த்தொற்று பரவிவரும் நேரத்தில் வெற்றி தோல்வி பற்றி பேசுவது சரியான நடைமுறையாக இருக்காது. அதேபோல், முதலமைச்சரின் செயலைப் பாராட்ட மனமில்லாதவர்கள் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஊரடங்குத் தளர்வு - அமைச்சர் காமராஜ் ஆலோசனை!