திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள விஷ்ணுபுரம் ஊராட்சி கறையான்திடல் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய தாழ்த்தப்பட்டக் கூலித் தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம் வசதிகூட இன்றி இவர்கள் இங்கு வாழ்ந்து வருகிறனர்.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பாதிப்பின் காரணமாக, தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கால் இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தினசரி ஒரு வேளை உணவுக்கே சிரமப்படும் நிலையில் இருப்பதை அறிந்து கொண்ட நன்னிலம் உள்கோட்டக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், தனது சொந்த முயற்சியில் ஏற்பாடு செய்து, அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை 40 குடும்பத்தினர்களுக்கும் வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும் அப்பகுதியில் சாலையோரத்தில் வசித்துவரும் 25க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர் குடும்பத்தினருக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.