திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சின்னபையன் மகன் எம்.சி.குப்பன் (98). முன்னாள் ராணுவ வீரரான குப்பன், கடந்த 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலக போரில் பணியாற்றியவர்.
இவருக்கு சாராதம்மாள் என்ற மனைவியும் பிரபாகரன் என்ற மகன் நிர்மலா மற்றும் மாலா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களில் மகன் பிரபாகரனும் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று குப்பனின் மனைவி சாரதாம்மாள் நோய்வாய்பட்டு இறந்துள்ளார். இதனையடுத்து இறந்த தன் மனைவிக்காக வண்ணாங்குளம் சுடுகாடு பகுதியில் 52 செண்ட் நிலத்தை சொந்தமாக வாங்கி, அங்கு சாரதம்மாளை அடக்கம் செய்து சமாதி கட்டி தினமும் வழிபட்டு வந்துள்ளார்.
அதேநேரம் மனைவி இறந்த மறுநாள் மனைவியை புதைத்த இடத்தின் அருகிலேயே, தான் இறந்தால் அதே இடத்தில் புதைக்க வேண்டி குழி தோண்டியுள்ளார். இந்த குழியை கடந்த 25 ஆண்டுகளாக குப்பன் பராமரித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 18 அன்று வயது முதிர்வு காரணமாக குப்பன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை குழி தோண்டிய அதே இடத்தில் குப்பனை நல்லடக்கம் செய்துள்ளனர். இதனை கண்ட ஊர் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: புற்று நோயால் உயிரிழந்த காதலி - துக்கம் தாங்காமல் காதலர் ரயிலில் விழுந்து தற்கொலை!