திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது காசிநாதபுரம் காலணி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குழாய் மூலம் குடிநீர் வழங்கி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் இல்லாமல் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திருத்தணி நாகலாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருத்தணி காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தும்போது அப்பகுதி மக்கள், “ஊராட்சி நிர்வாகம் முறையாகக் குழாய்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யாததால், குழாய்களில் ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எங்கள் பகுதியில் உள்ள மூன்று ஆழ்துளைக் கிணற்றிலும் மின் இணைப்பு இல்லை. இந்தக் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கினால், அதிலிருந்து தண்ணீரைப் பெறுவோம். ஆகையால் உடனடியாக மின் இணைப்பு வழங்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் உறுதி அளித்ததின் பெயரில் மக்கள் கலைந்து சென்றனர்.