திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த கொண்டஞ்சேரியில் அமைந்துள்ள டிஇஎல்சி குரு சேகரம் சார்பில் மாபெரும் சமத்துவ கிறிஸ்தவ பெருவிழா ரெவரண்ட் பாதர் கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இந்துக்கள் வரலாம், பார்சியர்கள் வரலாம், சீக்கியர்கள் வரலாம், பௌத்தர்கள் வரலாம், கிறிஸ்தவர்களும் வரலாம் ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் வரக்கூடாது. வந்தால் குடியுரிமை வழங்க மாட்டோம் என இந்த அரசு இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகிறது.
இதற்கு காரணம் இஸ்லாம் மதத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடு கிடையாது. அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. அதேபோல் கிறிஸ்தவ மதத்திலும் ஏற்றத்தாழ்வு, பாகுபாடில்லாமல் அனைவரும் சமம் என பைபிள் போதிக்கிறது. ஆனால் இந்து மதத்தில் மட்டும் மனு தர்மம் என்ற பெயரில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பிராமணர்கள் உயர்ந்தவர்கள், சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என பாகுபாடு உள்ளது. சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அனைவரும் சமம் அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும், அனைவரும் அதிகாரத்திற்கு வரலாம், பதவிக்கு வரலாம் என்ற கருத்தின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றினார்.
ஆகையால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மோடியும், அமித் ஷாவும் அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தங்களது வெறுப்பை காட்டி வருகின்றனர். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்து ராஜ்ஜியம் என மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும், இந்துக்கள் மட்டும்தான் ஆள வேண்டும் என்பதிலும் குறிக்கோளாக வைத்து சட்டங்களை இயற்றி வருகின்றனர்.
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் தாழ்த்தப்பட்டவன் என்றால் அடிமையாக வேலை செய்வதும் கூனிக்குறுகி நிற்பதும் தான் இருக்கவேண்டும். அவர்கள் வாய் திறந்து பேசக்கூடாது. ஆட்சி அதிகாரங்களில் வரக்கூடாது. அப்படி வந்து எதிர்த்து நின்று பேசினால் அதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் இதுபோன்ற சட்டங்களை மாற்றுகின்றனர். எனவேதான் சமூக நீதியுடன் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது இவர்களுக்கு வெறுப்பு வருகிறது என்றார்.
இதையும் படிங்க: