திருவள்ளூரைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் பூவிருந்தவல்லி தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களாக அவருக்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில், ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று (ஜூன் 21) உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர் பணிபுரிந்து வந்த பூவிருந்தவல்லி தாசில்தார் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தில் பணிபுரியும் பிற ஊழியர்கள் சிலருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
துணை தாசில்தார் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்றத்தூரில் பெண் தாசில்தார் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் வருவாய்த் துறையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவது அலுவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : முழு ஊரடங்கு : ஆள் அரவமற்று காணப்படும் சென்னை