திருவள்ளூர்: ஒண்டிக்குப்பம் பகுதியில் ரமேஷ் - சுதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக வீட்டில் செல்லப் பிராணிகளான நாய், கோழி, புறா உள்ளிட்டவற்றை மிகவும் செல்லமாக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ் - சுதா தம்பதியர் வளர்த்து வந்த உயர் ரக இனத்தைச் சேர்ந்த நாய் சமீபத்தில் 6 குட்டிகளை ஈன்றது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 6 குட்டிகளில் 3 குட்டிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும், இதனை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் மணவாள நகர் காவல் நிலையத்தில் தம்பதி புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தாங்கள் பல ஆண்டுகளாக ஒண்டிகுப்பம் பகுதியில் வசித்து வருவதாகவும் செல்லப் பிராணிகளை ஆசையுடன் வளர்த்து வருவதாகவும், ஒண்டிகுப்பம் மற்றும் மணவள நகர் பகுதிகளில் அடிக்கடி பல வீடுகளில் நகை, பணம் உள்ளிட்ட உயரிய பொருள்கள் திருடுபோவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் தற்போது தாங்கள் ஆசையுடன் வளர்த்த உயர் ரக நாய் இனத்தைச் சேர்ந்த 3 குட்டிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். காவல் துறை உடனடியாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நாய் குட்டிகளை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மணவாளநகர், ஒண்டிகுப்பம் பகுதிகளில் இரவு நேரங்களில் காவல் துறை ரோந்து பணியை அதிகப்படுத்தி திருட்டு சம்பவங்களை தடுக்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை பெற்ற காவல் துறையினர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷேர்சாட் மூலம் பழகிய சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் - போக்சோவில் கைது