திருவள்ளூரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கலந்துகொண்டு தொழில் முனைவோரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருமுல்லைவாயில், திருமழிசை, ஆர்.கே பேட்டை உள்ளிட்ட சிட்கோ தொழிற்பேட்டைகளுக்கு தேவையான சாலைகள், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் உயர் அலுவலர்கள் மூலமாக நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்சாலைகளிலும் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு அங்கு பணபுரியும் தொழிலாளர்கள் மனநிம்மதியுடன் வாழ வழிவகை செய்யப்படும்.
ஒவ்வொரு தொழிற்சாலையை சுற்றியும் சுற்றுச்சூழல் மேம்பட வேண்டும் என்றும், மரங்கள் கண்டிப்பாக நடப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அப்போது, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலராமன், விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.