திருநெல்வேலி: ஹைகிரவுண்டில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக இங்கு நாள்தோறும் சராசரியாக 3ஆயிரம் பேர் புற நோயாளிகளாகவும் 2ஆயிரம் பேர் வரை உள்நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெறுகின்றனர்.
இந்த அரசு மருத்துவமனையில் சமீபகாலமாக சிகிச்சை அளிப்பதிலும், நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதிலும் மருத்துவமனை நிர்வாகம் மிக அலட்சியத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக நோயாளிகளின் ரத்தப்பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் நாள் கணக்கில் காத்துக்கிடந்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக பிரசவ வார்டில் பிரசவம் முடிந்த பெண்களுக்கு படுக்கைகள் வழங்காததால், பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்து கிடக்கின்றனர். குறிப்பாக அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஆன பெண்களும் தரையில் படுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கக்கூட மருத்துவமனை ஊழியர்கள் படுக்கைகள் வழங்குவதில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட உடைமைகளுடன் பெண்கள் பிரசவ வலியோடு தரையில் படுத்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்வாகத்தினர் போதிய படுக்கைகள் ஒதுக்கி கொடுக்காததால் தான் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வரை, இதுபோன்று படுக்கைகள் இல்லாதபோது பெண்களுக்கு தரையில் படுக்க பாய் கொடுத்துள்ளனர். தற்போது அதுவும் வழங்கப்படாததால் பிரசவமான பெண்கள் வெறும் தரையில் படுத்திருக்கின்றனர். இதனால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
பொதுவாகவே பிரசவ நேரத்தில் பெண்களுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் தான் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால், மருத்துவமனையில் நடைபெறும் இந்த அவலம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'என்ஐஏ தமிழ்நாட்டில் நுழையத்தடை விதிக்கவேண்டும்' - எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முபாரக்