திருநெல்வேலி: கடம்பூர்- கோவில்பட்டி, கங்கைகொண்டான்- திருநெல்வேலி வரையிலான இரட்டை ரயில் பாதை நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கக் கூடிய வகையில் மேம்படுத்தப்பட்ட இரட்டை ரயில் பாதையை பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து நெல்லை ரயில் நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின், “ கடம்பூர்- கோவில்பட்டி, கங்கைகொண்டான்- திருநெல்வேலி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன. இன்று முதல் அந்தப் பாதைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கக் கூடிய வகையில் மேம்படுத்தப்பட்ட இரட்டை ரயில் பாதையில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. முதல் கட்டமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் பாதையில் ரயில்களை இயக்கவுள்ளோம். அடுத்த ஓரிரு தினங்களில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்.
தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த ஓராண்டுக்குள் நிறைவுபெறும்.
மொத்தம் இரண்டு கட்டங்களாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமான, மதுரை- தூத்துக்குடி வரை 1,182 கோடி ரூபாய் மதிப்பிலும், மணியாச்சி முதல் நாகர்கோவில் வரை 1,003 கோடி மதிப்பிலும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
நிலம் கையகப்படுத்தல், தொழில்நுட்ப பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்கள் இடையில் மட்டுமே பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கரோனோவுக்கு பிறகு விரைவு ரயில்கள் படிப்படியாக இயக்கப்படுகிறது, தற்போது 90 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : திமுக - மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி உறுதி!