கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அத்தியாவசியப் பணிக்கு வெளியில் வருபவர்கள், கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும்.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வெளியில் வர சிகப்பு, பச்சை, நீலம் என மூன்று வர்ணங்களில் அட்டைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியில் வருபவர்கள் அதைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அவைகள் இல்லாமல் வெளியில் வருபவர்களுக்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் பல்வேறு இடங்களில், மாநகராட்சி ஊழியர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அண்ணா சிலை அருகே சாலையில் வந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள் என அனைவரும் நிறுத்தப்பட்டு அவர்களிடம் மாநகராட்சி வழங்கிய அடையாள அட்டை, முகக் கவசம் அணிந்துள்ளார்களா என சோதனை செய்தனர்.
அதில், முகக் கவசம் அணிந்து வந்து அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்கள்; அடையாள அட்டை வைத்து முகக்கவசம் அணியாதவர்கள் ஆகியோருக்கும் அலுவலர்கள் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க:முகக்கவசம் அணியவில்லையெனில் அபராதம்: நெல்லை மாவட்ட நிர்வாகம்