தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் சக்திவேல். அவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (எ) மதன் என்பவரின் வீட்டுடன் கூடிய காலிமனையை தனக்கு சொந்தமானது என்று பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பெரியகுளம் வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜன.04) மீண்டும் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இரண்டு வருடங்களாக காலதாமதம் செய்து வந்த பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சார்பு நீதிமன்ற அமீனா, ரமேஷ், மனுதாரரின் வழக்கறிஞர் ஆகியோர், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலாவிடம் பிடிவாரண்ட் சம்மனை அளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கனில் அதிமுக தலைவர்கள் படம், சின்னம் இடம்பெறாது - தமிழ்நாடு அரசு விளக்கம்!