தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் கௌதமும்(19), பாஸ்கரன் மகன் பிரகதீஸ்வரனும்(17) உறவினர்கள் ஆவர். இந்நிலையில், இருவரும் அவர்களது நண்பர்கள் கேசவன், ஸ்ரீஜித் ஆகியோருடன் சேர்ந்து கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை மரப்பாலம் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற பிரகதீஸ்வரன், கௌதம் இருவரும் நீந்த முடியாமல் தண்ணீரில் சிக்கியுள்ளனர். இதைப் பார்த்த சக நண்பர்கள் உடனடியாக அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆழம் அதிகமாக இருந்த காரணத்தினால் அப்பகுதி மக்களையும் உதவிக்கு அழைத்தனர். ஆனால், அதற்குள் இருவரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
![உயிரிழந்தவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:22_tni_0106newsroom_1591015904_238.jpg)
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் மாணவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குமுளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.