கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் புதிதாக மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக தேனி அரசு சட்டக்கல்லூரி கடந்தாண்டு முதல் செயல்படத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்திற்கு வீரபாண்டி - தப்புக்குண்டு சாலையில் 14ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் சுமார் 89 கோடியே ஒரு லட்டம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு சட்டக்கல்லூரி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினர். முன்னதாக வாஸ்து பூஜை , கோமாதா பூஜைகள் நடைபெற்றது.
புதிதாக கட்டப்படவுள்ள தேனி அரசு சட்டக்கல்லூரியில், தரை மற்றும் இரு தளங்கள், 26 வகுப்பறைகள், சுமார் 400 மாணவர்கள் பங்கு பெறும் வகையில் கருத்தரங்குக் கூடம், காணொலிக் காட்சி அறை, சொற்பொழிவு அறை, மாணவ மாணவியர்களுக்கென்று தனித்தனி ஓய்வறைகள், கணினி ஆய்வகம், உள் விளையாட்டு அரங்கம், மாணாக்கர்கள் சர்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏற்ப சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நவீன தரத்தில் கல்லூரி அலுவலகம், நிர்வாக தொகுதிக் கட்டிடங்கள், அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அடங்கிய நூலகம் கட்டடங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது.
மேலும், 2 ஏக்கர் பரப்பளவில் மாணவர் விடுதியும் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிசார்கா புயல் தகவல்கள் உடனுக்குடன்...