தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன்(54) – தங்கமணி(48) தம்பதியினர். இவர்கள் இருவரும் இன்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனைக்கண்ட காவல்துறையினர் இருவரையும் தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மகேந்திரனின் தாய் ஒச்சம்மாள் தனக்கு செட்டில்மென்ட் கொடுத்த வீட்டை தனது சகோதரிகள் வழக்குத் தொடர்ந்து அபகரிக்க முயல்வதால் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே மகேந்திரன் தனது தாய் ஒச்சம்மாளை சரிவர கவனிக்காமலும், உணவு வழங்காமல் இருந்து வந்ததால் தான் செட்டில்மென்ட் கொடுத்த பத்திரத்தை ரத்துசெய்யக்கோரி மகள்கள் ஜெயலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த மனு விசாரணையில், செட்டில்மென்ட் கொடுத்ததினால் அது செல்லாது என்றும், இதனை சரிசெய்ய நீதிமன்றம் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தேனி நகர் காவல்நிலையத்தில் மகேந்திரன், மீது அவரது தாய் ஒச்சம்மாள் இடப்பிரச்சனை சம்பந்தமாக புகார் அளித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக தேனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடப்பிரச்னையின் காரணமாக தம்பதியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:பேச்சுவார்த்தைக்கு வரவழைத்து அரிவாளால் வெட்டிய நபர் கைது